திகைப்பில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் இதுவரை உயிரிழந்திருப்பது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்தப் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் படித்து வந்த ஜார்கண்டை சேர்ந்த கௌதம் குமார் என்ற மாணவர் சாலை விபத்தில் படுகாயமடைந்து அண்ணாமலை மருத்துக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவரது நிலைமை மோசமானதால் புதுச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து அவருடன் படிக்கும் சக மாணவர்கள் 500 பேர், குறிப்பாக வட இந்திய மாணவர்கள், சரியான சிகிச்சை அளிக்காததால் தான் கௌதம் பலியானதாகக் கூறி, அண்ணாமலை மருத்துவக் கல்லூரியை சூறையாடினர்.
இதைத் தொடர்ந்து போலீசார் தடியடியில் மாணவர்கள் தப்பியோடியபோது, பிகாரை சேர்ந்த சுனித் குமார் என்பவர் பாலமான் ஓடையில் தவறி விழுந்து பலியானார். இதனால் நிலமை இன்னும் மோசமடைந்தது. இதைத்தொடர்ந்து, பதற்றம் அதிகரிக்கவே பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரியும் விடுதியும் மூடப்பட்டு மாணவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் இன்று பாலமன் ஓடையில் இருந்து மேலும் 2 மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு மேலும் பதட்டம் அதிகரித்துள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களும் போலீஸ் தடியடியில் இருந்து தப்பியோடியபோது தவறி விழுந்து பலியானார்களா அல்லது வேறு வகையில் இறந்தார்களா என்று தெரியவில்லை. விசாரணை பரபரப்பாக நடந்து வருகிறது.
Comments
Post a Comment